Get paid To Promote at any Location

நோய் தீர்க்கும் பூண்டு


பூண்டு என்றவுடன் மூக்கை பிடித்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் பூண்டு அற்புதமான மருந்துபொருள் என்பது அவர்களுக்கு தெரியாது. பொதுவாக அமர்ந்தபடி அலுவல் புரியும் பலருக்கு ஏற்படும் பெரும் தொல்லை, வாயு தொல்லை. அதற்கு அற்புதமான மருந்து பூண்டு. மருத்துவரிடம் சென்று அவர் தரும் பூண்டு மாத்திரைகளை சாப்பிடுவதற்கு பதிலாக உணவில் பூண்டை சேர்த்து கொள்வது பல வகைகளிலும் நல்லது.
இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது.
பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சைனா போன்ற நாடுகளில் எல்லாவகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது.

பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் ஐயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.
பூண்டின் மணத்திற்குக் காரணம் அதில் உள்ள சல்பரே.
இதில் பலவகையான மருத்துவ குணங்கள் உள்ளன். அவற்றினை காண்போம்.

மருத்துவ குணங்கள்: இது ஒரு சிறந்த கிருமி நாசினி. வியற்வையை பெருக்கும்,உடற்சக்தியை அதிகப்படுத்தும், தாய்பாலை விருத்தி செய்யும்,சளியை கரைத்து சுவாச தடையை நீக்கும்,சீரண சக்தியை அபிவிருத்தி செய்யும், இரத்த கொதிப்பை தணிக்கும்.
உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும். இதய அடைப்பை நீக்கும்.நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் குறைக்கும். ஆண்களின் ஹார்மோன் உற்பத்தியைப் பெருக்கி வீரியம் அதிகரிக்கக் கூடியது பூண்டு.
பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும்.

தொண்டை சதையை நீக்கும்.

மலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.

மாதவிலக்குக் கோளாறுகளை சரி செய்யும்.
பிளேக் முதல் சார்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகள் வரை அழிக்கும் திறன் கொண்டது.

சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும். மூட்டு வலியைப் போக்கும். வாயுப் பிடிப்பை நீக்கும்.
இரத்த அழுத்தம் வந்த பின் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பூண்டு விளங்குகிறது

உபயோகிக்கும் முறை:

தினமும் இரண்டு பல் துண்டு பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

உள்நாக்கு வளர்தலுக்கு: வெள்ளை பூண்டை இஞ்சி சாறுவிட்டு அரைத்து கொஞ்சம் தேனும் கலந்து காலை, மாலை என இரண்டு வேளையும் உணவுக்கு முன் இரண்டு தேக்கரண்டி சாப்பிட்டு வரவும். இவ்விழுதை தொண்டையின் வெளிப் பூசி வர வேண்டும். இப்படி செய்தால் மூன்றே நாளில் குணமாகும்.

சுளுக்கு : வெள்ளை பூண்டை உப்பு சேர்த்து இடித்து,சுளுக்கினால் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் சுளுக்கு நீங்கி விரடும்.

தேமல் : வெள்ளை பூண்டையும் வெற்றிலையும் சேர்த்து அரைத்து தேமலின் மீது தடவினால் கொஞ்சம் கொஞ்சமாக தேமல் மங்கி கொண்டே வந்து கடைசியில் மறைந்துவிடும்.

இரத்த அழுத்ததிற்கு: இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் தினமும் இரவு படுக்க செல்லும் போது பூண்டை பசும்பாலில் கொதிக்க வைத்து பிறகு பூண்டுடன் பாலை குடித்து வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.

காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும்.

இளம் தாய்மார்கள், பூண்டை பாலில் வேக வைத்து சாப்பிட அதிகமான பால் சுரக்கும்.

அதிகப்படியான கொழுப்பு, மூட்டுவலி உள்ளவர்களுக்கு நல்லது.

மற்றும் வைரஸ் போன்ற தேவையற்ற துன்பம் தரும் உயிர்களையும் இந்தப் பூண்டு அழிப்பதுடன் உணவுப் பாதையில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் தேவையற்ற காற்று அடைத்திருந்தாலும் அவற்றையும் சரி செய்துவிடும்.

நம்முடைய குடலில் குடியிருக்கும் புழுக்களும் பூண்டு சாப்பிடுவதால் அவை தானாகவே வெளியேறிவிடும்.

பூண்டு நம்முடைய இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ரால், கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும்.

இதனால் இரத்தம் தடையின்றி நம் உடல் முழுவதும் சுற்றுவதால் செல்களுக்குத் தேவையான உணவும் ஆக்ஸிஜனும் கிடைப்பதால் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சு வாங்குதல் ஆகியன சீராகும்.

கேன்சரினால் கஷ்டப்படுபவர்கள் அதற்குரிய மருந்துகளுடன் முழுப்பூண்டுப் பற்களை வேகவைத்து தினமும் சாப்பிட கேன்சர் புண்கள் விரைவில் சரியாகிவிடும்.

நம்முடைய முகத்தில் தோன்றும் பருக்கள் மீது பச்சைப் பூண்டினை பலமுறை தேய்த்து வர பருக்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும்.

ருசிக்காக ஆசைப்பட்டு எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால், உடனே இரண்டு பச்சைப் பூண்டுப் பற்களை எடுத்து சிறிது சிறிதாகக் கடித்து சாப்பிட செரிமானத்தன்மை ஏற்படும்.

குறிப்பு:

பல்வேறு மருத்துவ குணம் கொண்ட இந்த பூண்டை உண்பதால் ஒருவித வாடை ஏற்படுகிறது. இதனாலேயே பலர் பூண்டை உணவுடன் சேர்த்துக் கொள்வதை தவிர்க்கின்றனர். இதை தவிர்க்க பூண்டு பற்களை, வெங்காய துண்டுகள், இஞ்சியுடன் இளம் சூட்டில் வறுத்து உண்ணலாம். தவிர, பூண்டு உணவு அல்லது பூண்டை உட்கொண்ட பிறகு கொத்தமல்லி, லவங்கம் அல்லது கிராம்பு போன்றவற்றை வாயில் ஒதுக்கி கொண்டால் பூண்டினால் உண்டாகும் ஒரு விதமான வாடையை தவிர்க்கலாம்.

ஆனால் பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது.
அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும்.

பசலைக்கீரை

கார்ட்டூன் நாயகன் பாப்பாய்க்கு மிகவும் பிடித்தது பசலைக்கீரை. 'என் புஜபல ரகசியம் இந்த கீரை தான்' என்று குழந்தைகளிடம் பிரபலப்படுத்தினான்.

உண்மையில் பசலைக்கீரை போல் உடலுக்கு நன்மை தரும் காய்கறி வேறெதுவும் இல்லை. இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எல்லாமே இதில் அதிகம்.ஃபோலாசின் நோய்த் தடுப்புக்கு முக்கியம் என்பதால் இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
குழந்தைகளுக்கு வரும் சில நரம்பு வியாதிகளை வராமல் தடுப்பதால் மேலைநாடுகளில் இதை கோதுமை, மைதா போன்ற மாவுகளில் கலந்து விற்கிறார்கள். இந்த கீரையில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் பார்வைக் குறைவை தடுக்கிறது. மலச் சிக்கலுக்கு எதிரி.
ஹிந்தியில் இதை பாலக் என்பார்கள்.
மருத்துவக் குணங்கள்: இதில் மிக அதிகமாக உள்ள பச்சையம் கொழுப்பை கரைக்கும் தன்மையுள்ளது. ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது. ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின் செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமிலவாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகி உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது. இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது. ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது.
உணவுச்சத்து: இதிலுள்ள விட்டமின் ஏ பார்வைக் கோளாறை தடுப்பதோடு சோர்வை நீக்கி, ரத்த
விருத்திக்கும் உதவுகிறது
ஒரு கப் பசலைக்கீரையில் இருக்கும் உணவுச்சத்து:
கலோரி 40, கொழுப்பு 0, சோடியம் 80 மில்லிகிராம், விட்டமின் ஏ 6800 IU (இது ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவை விட ஒன்றரை மடங்கு அதிகம்), விட்டமின் சி 28 மி.கிராம்,ஃபோலாசின் 200 மி.கிராம், கால்சியம் 100 மி.கிராம், பொட்டாசியம் 560 மி.கிராம்
பசலைக்கீரை - குளிர்ச்சி தருவதில் சிறந்தது, நீர் உடலினர் அடிக்கடி சாப்பிடக் கூடாது.

நீரைப் பெருக்கும். பால் சுரக்கும்.

வயிற்று புண்ணாற்றும், கண்ணொளி தரும். இதை உபயோகிப்பதால் உடல் தொற்று பெருமளவில் தடுக்கப் படுகிறது.

வைட்டமின், கால்ஷியம் அதிக அளவு ஹீமோகுளோபின், புரதம் செறிந்த கீரை.

அதிக அளவில் B காம்ப்ளெக்ஸ் இருப்பதால் வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து.

கறிவேப்பிலையின் பயன்கள்



கறிவேப்பிலை ஒதுக்காதீர்
மாறிவரும் இயந்திர யுகத்துக்கு ஏற்ப நோய்களும் புதிது புதிதாக வர ஆரம்பித்து விட்டன.

இப்பொதெல்லாம், இளம் வயதிலேயே, பார்வைக் கோளாறு, மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுவது மக்களை பீதியடையச் செய்கிறது.நோய்களின் தாக்கத்தில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள உடற்பயிற்சி மிக முக்கியம். அதோடு சரிவிகித உணவு அவசியம்.அதிலும் இயற்கையில் கிடைக்கும் உணவுப் பொருட்களில் எத்தனையோ சத்துக்கள் பொதிந்து கிடக்கின்றன.

நமது உணவுப் பொருட்களுடன் அன்றாடம் சேர்க்கப்படும் கறிவேப்பில்லையை சாப்பிடாமல் ஒதுக்கி விட வேண்டாம்.

அதில், வைட்டமின் ஏ 75000 மைக்ரோ கிராம், கால்சியம், போலிக் அமிலம், மற்றும் வைட்டமின் பி, சி ஆகிய சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

'வைட்டமின் ஏ' சத்து குறைவினாலே, பார்வை சம்பந்தமான கோளாறுகள் ஏற்படுகின்றன.

முருங்கைக் கீரை போல, கறிவேப்பில்லையிலும் 'ஏ' சத்து அதிகமிருப்பதால் இனி இதை தவிர்க்க வேண்டாமே!. மேலும், மற்ற உணவு வகைகளைப் போல கறிவேப்பில்லையை நாம் தேடி அலைய வேண்டாம். நமது அன்றாட உணவு வகையிலேயே கலந்து கிடக்கிறது.

உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.
இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.

கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.

திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்தியன் கவுன்சில் ஆப் மெடிகல் தினமும் 170 கிராம் காய்கறிகளை சாப்பிட சிபாரிசு செய்கிறது. 75 - 125 கிராம் கீரைகளையும் சாப்பிட சிபாரிசு செய்கிறது. 170 கிராம் காய்கறிகளை சாப்பிட முக்கியமான 10 காய்கறிகளையும் குறிப்பிடுகிறது. அதில் ஒன்று கறிவேப்பிலை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம் : இணையம்

வாழைப்பழம்


வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. இதில் குளூக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.

வரலாறு: வாழைப்பழம் முதலில் தோன்றியது ஆசியாவில். மத்திய அமெரிக்காவில் 350 வருடங்களாகத்தான் பிரபலம். அங்கிருந்து வட அமெரிக்காவிற்கு போனது. கொஞ்சம் கொஞ்சமாக வாழைப்பழத்தின் பயன்கள், மருத்துவக் குணங்கள் எல்லாம் தெரிய ஆரம்பிக்க, இப்போது காலை உணவின் முக்கிய அம்சமாகி விட்டது.

கி.மு 327 ல் அலெக்ஸாண்டர் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த போது வாழைப்பழத்தை விரும்பிச் சாப்பிட்டிருக்கிறார். திரும்பிப் போகும் போது கிரேக்க நாட்டிலும் மேலை நாடுகளிலும் அறிமுகப்படுத்தியதாகச் சொல்கிறார்கள். அரேபியர்கள் இதை அடிமை வியாபாரத்துடன் சேர்த்து விற்பனை செய்தனர். அடிமை வியாபாரிகள் தந்த பெயர் பனானா. அப்போது வாழைப்பழம் இப்போது போலப் பெரிதாக இருந்ததில்லை. விரல் நீளம்தான் இருக்கும். அரேபிய மொழியில் பனானா என்றால் விரல் என்று அர்த்தம். எல்லாப் பழங்களும் பழுக்கும் போது எத்திலீன் வாயுவை வெளிப்படுத்தும். வாழையில் அதிகமாக இருக்கும்.

வகைகள்: 1. இனிப்பான பழவகை 2. சமையல் செய்ய காய்வகை. இதில் ஒவ்வொன்றிலும் பல வகைகள் உண்டு. காய்வகை பழுக்காது. பழுத்தாலும் சாப்பிட நன்றாக இருக்காது

மஞ்சள், பச்சை, சிவப்பு, கறுப்பு கூட உண்டு. அதேபோல் சிறியது, தட்டை, வழவழப்பு, சொரசொரப்பா, நீளம், விரல் நீளம் என்று பல வடிவங்களையும் வண்ணங்களையும் கொண்டது. விரல் நீளமே உள்ள மன்ழெனொ என்னும் வகைதான் பழுத்ததும் கறுப்பாகிவிடும்.

வாழை வகையில் தென்னிந்தியாவை மிஞ்ச முடியாது. மலைப்பழம், ரஸ்தாளி, சிறுமலைப்பழம், பூவன், சர்க்கரை கதளி, செவ்வாழை, பச்சைப்பழம், பேயன் இப்படி.

வாழைக்காயில் மாவுச்சத்து அதிகம். நன்றாக பழுத்த பழத்தில் இதுவே சர்க்கரையாகி மிருதுத்தன்மையையும் நல்ல மணத்தையும் தருகிறது.

குணங்கள்: வாழை ஒரு மரமில்லாத மரம். மற்ற மரங்களுக்கு இருப்பதைப் போன்று கனத்த கெட்டியான அடிமரமோ, கிளைகளோ கிடையாது. 8௰ அடி உயரத்தில் மரம்போல் வளர்ந்தாலும் அதன் அடிமரம் அடுக்கடுக்கான மெல்லிய பட்டைகளாலானது. பலமாக காற்றடித்தாலும் மளுக்கென்று ஒடிந்து விடக் கூடியது. இந்தத் தண்டு பத்து அடி வரை வளர்ந்து 100 லிருந்து 150 பழங்கள் கொண்ட வாழைத் தாரையே தாங்கும் பலம் பெற்றிருப்பது எப்படி என்பது இயற்கையின் விந்தை.


இலைகள் நீண்டு பெரிதாக இருப்பதால் பழங்குடியினர் இதை வீட்டுக்கு கூரையாகவும், குடையாகவும் கூட உபயோகிக்கின்றனர். ஒரு மரம் ஒரு முறைதான் பழம் தரும். ஒரு சீப்பை கை என்றும், தனியாக ஒரு பழத்தை விரல் என்றும் ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். பல அடுக்கு சீப்புகள் கொண்டது ஒரு குலை. வாழைச் சீப்பு எப்போதும் மேல் நோக்கியே இருக்கும். வீட்டிலும் அதை அப்படியே வைத்தால்தான் கெடாமல் இருக்கும்.


சத்துக்கள்: பொட்டாசியம் 400 மில்லி கிராம், Folocin 20 மைக்ரோ கிராம், விட்டமின் சி, 10 மில்லி கிராம், விட்டமின் பி 6-.6 மில்லி கிராம்.

மருத்துவக் குணங்கள்

1.நெஞ்சுக்கரிக்கும் போது ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது.
2.கர்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது.
3. மனஉளைச்சலைக் குறைக்கும் அருமருந்தாக வாழைப்பழம் பயன்படுகிறது. வாழைப்பழத்திலிருக்கும் ட்ரிப்டோஃபேன் எனும் புரதம் மனஉளைச்சலைக் குறைத்து ஆறுதல் அளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
4. நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும்.
5.இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.
6.குடிபோதையை நீக்க சிறந்தது. இதனை மில்க்ஷேக் செய்து தேன் கலந்து பருகினால் வயிற்றைச் சுத்தம் செய்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும்.
7. மிக ஆரோக்கியமான, ஒரு கெடுதலும் தராத பழவகை இது. இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சாப்பிடச் சொல்வார்கள். இதில் சோடியம் உப்பு குறைவாக இருப்பதால் ரத்த அழுத்தக்காரர்கள் சாப்பிடலாம். குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது.
8. கால்களில் ஆடுசதையில் சட்டென்று பிடித்திழுக்கும். இது பொட்டாசியம் குறைவால் வருகிறது. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இதைத் தடுக்கலாம்.
9.பொட்டாசியம் இருந்தாலும் உப்புச் சத்து குறைவாக இருப்பதால் இது இரத்த அழுத்தத்தைச் சீர்செய்யவும், மூளை விழிப்புடன் இருந்து சிந்தனைத் திறனை மேம்படுத்தவும், சிகரெட் கைவிட்டவர்கள் நிக்கோட்டின் ஆதிக்கத்திலிருந்து விரைவில் விடுபடவும் உதவுகிறது.
10.வாழைப்பூ, தண்டு இரண்டும் கணையத்திலும் சிறுநீரகத்திலும் கற்கள் வராமல் பாதுகாக்கும்.
11. வைட்டமின் B அதிகம் இருப்பதால் நரம்பு மண்டலத்தைச் சீராக வைத்திடவும் வாழைப்பழம் உதவுகிறது.
12. வேலையில் உண்டாகும் அழுத்தத்தினால் சிலர் அதிகமாக சாக்லேட்டுகளை உட்கொள்ள எத்தனிப்பர். இவர்கள் வாழைப்பழத்தை சிற்றுண்டி போல உட்கொண்டால் உடல் எடை அதிகரிப்பிலிருந்தும், குடற்புண் ஏற்படுவதிலிருந்தும் தப்பலாம்.
13.கொசு கடித்த இடத்தில் வாழைப்பழத் தோலின் உள்பகுதி கொண்டு தேய்த்தால் அரிப்பும் தடிப்பும் போகும்.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வாழைப்பழத்தை ஒதுக்கி வைக்க வேண்டும்.

வாழை வெப்ப சீதோஷ்ண பகுதியில் தான் அதிகமாக விளையும். குளிர்பிரதேசத்தில் வராது. இதனால்தான் இந்தியாவில் அதிகமாக விளைகிறது. அதுவும் தென்னிந்தியர்களின் கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வாழை இல்லாமல் எந்த சுப, அசுப காரியங்களும் இடம்பெறுவதில்லை.எது எப்படியோ வாழைப்பழம் ஓர் இன்றியமையாத உணவுப்பொருள் என்பதை எவரும் மறுக்க இயலாது.

சக்தியளிக்கும் மாதுளை


மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு ரக மாதுளையும் சக்தியளிக்கும் பழத்தில் சிறந்தது. மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது.

பழம்- சந்நியாசி ரோகம், வாந்தி, கபம், மிகுதாகம், மலட்டு நோய், வாய் நீர் சுரப்பு, விக்கல், மாந்தம், அதிசுரம், நெஞ்செரிவு, காதடைப்பு, நீங்காமயக்கம், உடற்சூடு இவை போகும்.
பிஞ்சி - பலவித மலக்கழிச்சல் போகும்.
தோல் - டயேரியா போகும்
சாறு - புத்துணர்ச்சி தரும்.
விதை - விந்து இறுகும். உடல் குளிர்ச்சியாகும்.

மாதுளம் பழத்தில் பாஸ்பரஸ் 70மி.கி. உள்ளது. கால்சியம்,இரும்பு ஆகிய தாது பொருட்கள், வைட்டமின்கள் பி,சி ஆகியவை சிறிதள்வு உள்ளன. கால்சியம் உடலில் சேருவதற்கு பாஸ்பரஸ் உதவி புரிகிறது.

இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது. புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய எந்த வகையான அல்சரையும் குணமாக்குகிறது.
மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம் கெட்டிப்படுகிறது. மேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து நிவர்த்தியாகும். பிரமேக வியாதியால் ஏற்படும் இதய நோய்கள், இதய பலகீனம், நிவர்த்தியாகும். இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண்தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.
மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். அடிக்கடி மயக்கம் உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும். மாதுளம்பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.
மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகி விடும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும். மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.
மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப்படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.
மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கட்டிக் கொண்டால் தலைவலி தீரும். வெப்பநோய் தீரும். மாதுளம் விதை, வேர்ப்பட்டை, மரப்பட்டை இவற்றைச் சமமாக எடுத்து உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு, வேளைக்கு 5 கிராம் வீதம் சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் கர்ப்பாசய நோய்கள் அனைத்தும் நிவர்த்தியாகி பெண்களின் ஆரோக்கியம் நீடிக்குமாம். மாதுளை ஒரு பல்முனை நிவாரணியாகப் பயன்படுகிறது.

குறிப்பு : இப்பகுதியில் இடம் பெறும் கட்டுரைகள் எமது அனுபவத்தை, படிப்பறிவை அடிப்படையாகக் கொண்டு எழுதியவை.

ஆற்றலை நல்கும் பப்பாளிப் பழம்!


ஆரோக்கியமான உணவுமுறையை கடைப்பிடித்தால், மருத்துவமனையை அணுக வேண்டிய நிலையே வராது. இதற்கு, நாம் உண்ணும் உணவில் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியம்.

உதாரணத்துக்கு எளிதில் நமக்கு கிடைக்கும் பப்பாளிப் பழத்தையே எடுத்துக் கொள்வோம்.
பப்பாளி பழம் உடல் நலனுக்கு உகந்த சிறந்த பழம். பழங்களில் மிக மிக குறைவான கலோரி பப்பாளியில்தான் உள்ளது 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன. பப்பாளியை தினமும் உணவுடன் சேர்த்து கொண்டால் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.

பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ,போலிக்அமிலம்,பொட்டசியம்,காப்பர்,பாஸ்பரஸ்,இரும்பு,நார்ச்த்துக்கள் உள்ளன.

ஆராய்ச்சியில் பப்பாளி தொடர்ந்து 4 வாரங்கள்சாப்பிட்டால் கொழுப்புசத்து 19.2விழுக்காடுகள் குறைகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
பப்பாளிபழத்தை சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம்.வறண்ட மேல் தோலை அகற்றி, புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு.

பப்பாளி பழத்தை முகத்தில் மெதுவாகப்பூசி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு மிதமான சுடுநீரில் கழுவுங்கள். முகம் பளிச் என்று பிரகாசிக்கும் .

சில பெண்களின் முகம் கரடு முரடாகத்தெரியும்.இந்த முரடான முகத்தை மென்மையாக்கும் சக்தி பப்பாளி தோலுக்கு உண்டு.பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வையுங்கள். அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக்கொள்ளுங்கள். இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், முகம் மென்மையானதாக மாறி விடும்.

பப்பாளி குடல்புழுக்களுண்டாவதையும் தடுக்கிறது. மலச்சிக்கல், வயிற்றுபோக்கு,வாய்வு,நெஞ்சு எரிச்சல்,அல்சர்,சர்க்கரை வியாதி,கண் பார்வை கோளாறுக்கும் பப்பாளி ஒரு சிறந்த மருந்து.

இந்தப் பழத்தில்தான் எத்தனையெத்தனை சத்துகள், வெவ்வேறு விதமான மருத்துவ குணங்கள்...

சுமார் 30 கிராம் அளவிலான பப்பாளி பழத்தை எடுத்துக் கொள்வாமாயின், அதில் வைட்டமின் பி 1- 11 மில்லிகிராம்; பி2 - 72 மில்லி கிராம்; வைட்டமின் சி - 13 மில்லி கிராம்; இரும்புச் சத்து - 0.1 மில்லி கிராம்; சுண்ணாம்புச் சத்து - 0.3 மில்லி கிராம் இருப்பதைக் காணலாம்.

விலைமதிப்புடைய ஆப்பிளைக் காட்டிலும் பப்பாளியில் அதிக அளவிலான உயிர்சத்துக்கள் (வைட்டமின்) இருக்கிறது என்பதால், இப்பழத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்.

இதிலுள்ள மருத்துவ குணங்களைக் காண்போமானால், மேலும் வியப்பு உண்டாகும் என்பது தெளிவு.

இரத்த விருத்திக்கும், தசை வளர்ச்சிக்கும் உறுதுணை புரியும் பப்பாளி பழம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மிகுதியாக்குகிறது. மலச்சிக்கல் நீக்கும் வல்லமையும் இப்பழத்துக்கு உள்ளது.

உடலுக்கு ஆரோக்கியத்தை நல்கி, சுறுசுறுப்புடன் இயங்குவதற்கு வழிவகை செய்யும் பப்பாளி பழத்தை, நாம் அன்றாடம் உட்கொள்ள வேண்டியது அவசியம்.
மிக மலிவான விலையில் கிடைக்கும் மிக சத்துவாய்ந்த இந்த கனியானது தன் தகுதிக்கேற்ற இடஒதுக்கீட்டைப் பெறவில்லை என்பது தான் சோகம்.

பப்பாளி எல்லா சூழ்நிலையிலும் நன்கு வளரக்கூடிய பழப்பயிர். தானாகவே வளரக்கூடியது, மிக குறைவான கவனிப்பே போதுமானது இந்த மரம். ஆனால் அது தரும் பலனோ மிக அதிகம். ஆனாலும் நோயாளிகளைப் பார்க்க செல்பவர்கள் கூட ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற விலை அதிகமான, பப்பாளியை விட சத்துக்குறைவான கனிகளைத்தான் வாங்கி செல்கிறார்களே தவிர, பப்பாளியைக் கவனிப்பாரில்லை.

பப்பாளி பனைபோல பருத்து உயர்ந்து வளர்ந்தாலும் முருங்கையைப் போலவே பலமற்ற மரம் இது. எளிதில் முறிந்துவிடும் தன்மைகொண்ட இம்மரமானது, சரியான சூழலில் 20 ஆண்டுகளுக்கு மேல் பலன் தரக்கூடியது.

ஆசிய நாடுகளில் சுமார் 10லட்சம் டன்கள் பப்பாளி உற்பத்தி செய்கின்றன. இதில் இந்தியாவில் பப்பாளி பழங்கள் 3 லட்சத்தி 70 ஆயிரம் டன் உற்பத்தி செய்கிறார்கள்.
பப்பாளி பழத்தின் விதைகள் மற்றும் தோலை நீக்கிய பின் மற்ற பழங்களை விட அதிக அளவு (75௮0 சதவீதம்) வீணாகாமல் உண்ணத்தக்கதாக உள்ளது. ஆனால் இதை நீண்டநாள் பாதுகாத்து பயன்படுத்த முடியாது.

100கிராம் பப்பாளிப் பழத்தில் 57மி.கிராம் வைட்டமின் சி உள்ளது. 100 கி ராம் பப்பாளிப்பழத்தில் வெறும் 32கிலோ கலோரி ஆற்றலே கிடைக்கிறது. எனவே இது குண்டானவர்களும், எடையை குறைக்க விரும்புபவர்களும் விரும்பும் பழமாக குணநலன்களைப் பெற்றுள்ளதுஆப்பிள், கொய்யா, சீத்தாப்பழம், வாழைப்பழம் ஆகியவற்றோடு ஒப்பிடுகையில் மிக அதிக அளவு கரோட்டின் சத்து உடையது பப்பாளி பழம் ஆகும்.
பப்பாளியை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு பொதுவாக இந்திய குழந்தைகளிடையே காணப்படும் வைட்டமின் ஏ குறைபாட்டால் ஏற்படும் பார்வைக் கோளாறுகளைத் தடுக்கமுடியும்.

பப்பாளிபழத்தில் உள்ள சர்க்கரை ரத்தத்தில் நேரடியாக கலப்பதில்லை. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கூட மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
பப்பாளியில் பீட்டா கரோட்டின் என்ற சத்தும் ஏராளமாக காணப்படுகின்றது. இது சில வகையான புற்றுநோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. பப்பாளியில் பல்வேறுவிதமான என்சைம்கள் காணப்படுகின்றன. இதிலுள்ள "பப்பாயின்" என்ற என்சைம் ஆனது மிகச்சிறந்த செரிமான ஊக்கியாக செயலாற்றுகிறது. இது உணவிலுள்ள புரதச்சத்தானது எளிதில் செரிக்க உதவுகிறது. எனவேதான் இறைச்சியை மென்மையாக வேகவைப்பதற்கு பப்பாளிக்காய் துண்டுகளையும் உடன் சேர்த்து சமைக்கும் பழக்கம் நமது நாட்டில் உள்ளது.

இந்த பப்பாயினின் வலி நீக்கும் தன்மையானது அமெரிக்க உணவு மற்றும் வேளாண்நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முதுகெலும்புதட்டு புறந்தள்ளல் போன்ற நோய்நிலைகளில் இதிலிருந்து தயாரிக்கப்படும் ஊசிமருந்தானது நரம்பு அழுத்தத்தால் ஏற்படும் வலியைப் போக்க பயன்படுத்தப்படுகிறது. கோதுமை புரதத்தை எளிதில் செரிக்கச் செய்வதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது. குடல்புண்ணால் அவதிப்படுவோருக்கும் பப்பாயின் பயன்படுகிறது.

பப்பாளியின் இலைகளும் வேர்களும் சிறுநீர் பெருக்கியாகவும், பழமானது மூலநோய்க்கும் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து உள்நாக்கு வளர்ச்சியை (டான்சில்) குறைக்கிறது. பப்பாளி பழரசமானது கழலைகள், கட்டிகள், புற்றுநோய் மற்றும் தோல்நோய்களை குணப்படுத்தப் பயன்படுகிறது. இதன் வேரானது, கருப்பைக் கட்டியை அகற்றப் பயன்படுகிறது. ஆப்பிரிக்காவில் பப்பாளி வேரானது கிரந்தி எனும் பால்வினை நோயை (சிபிலிஸ்) குணப்படுத்தவும், இலையானது இழுப்பு (ஆஸ்துமா) நோயின்போது புகைபிடிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஜாவா தீவைச்சோந்த மக்கள் பப்பாளி (வாத) நோயிலிருந்து பாதுகாக்கும் என்று நம்புகின்றனர். கியூபாவில் பப்பாளிப் பாலானது (சோரியாஸிஸ்) காளாஞ்சகப்படை மற்றும் புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகிறது.

பப்பாயின் குடலில் உள்ள நாடாப்புழுக்களை அழிக்கவும், பூச்சிகளை அழிக்கவும் நூற்றாண்டு காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மேற்கொள்ளப் பட்டுள்ள ஆய்வுகள் பப்பாளியின் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மையானது காயங்களை ஆற்றவும் அறுவைசிகிச்சையின் பின் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், புற்றுநோய் சிகிச்சையின்போது ஏற்படும் தீய பக்கவிளைவுகளிலிருந்து விடுபடவும், மூட்டுவாத நோய்களுக்கும் கூட உதவலாம் என்று கண்டுபிடித்துள்ளனர்.

பப்பாளி மரத்தோலானது கயிறு தயாரிக்கவும், இலைகள் சோப்புக்கு மாற்றாகவும் கூட சில நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இது மிகச் சிறந்த கறை நீக்கியாக செயல்படுகிறது. ஜாவா தீவு மக்கள் பப்பாளி பூக்களை சாப்பிடுகின்றனர்.

சிறந்த இப்பழத்தினை உண்டு நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழ என் வாழ்த்துக்கள்

கோவைக்காய் சமைக்கும் முறை



கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

ரகம்- 2 சர்க்கரை நோயாளிகள் தினமும் கோவக்காயை சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். அனைத்துக் கடைகளிலும் மிக எளிதாகக் குறைந்த விலையில் கிடைக்கும் கோவக்காய் நார்ச்சத்து நிரம்பியது. அதை சமைத்தும் பச்சையாகவும் சாப்பிடலாம். இதைப்பற்றி நமது பல வலைபதிவ நண்பர்கள் கும்மிருந்தார்கள்.இதை மருந்து மாதிரி சாப்பிடாமல் எப்படி சுவையாக சாப்பிடலாம் என்பதற்கான எனது முயற்சி


அதை எவ்வாறு சமைப்பது என்பதை காண்போம்

தேவையானப் பொருட்கள்

கோவங்காய்-1/4கிலோ
வெங்காயம்- ஒன்று
தக்காளி - 2
எண்ணெய் - ஒரு மேசக்கரண்டி
குழம்பு தூள-இரண்டு தேக்கரண்டி
மஞ்சத்தூள் -அரைதேக்கரண்டி
கடுகு சீரகம்-ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை-ஆறு எண்ணிக்கை
உளுத்தம் பருப்பு-ஒரு தேக்கரண்டி
தேங்காப் பூ--மேசைக்கரண்டி
உப்புத்தூள்-ஒரு தேக்கரண்டி
பாசிப்பருப்பு-7மேசைக்கரண்ட

கோவைக்காய் ,தக்காளி வெங்காயம், ஆகியவற்றை வட்டம்வட்டமாக நறுக்கி கொள்ளவும்
சட்டியில் எண்ணெயை காயவைத்து கடுகுசீரகம் உ.பருப்பு,சோம்பு கறிவேப்பிலை போட்டு பொரிந்தவுடன் வெங்காயத்தை போட்டு வறுக்கவும்.

தக்காளி போட்டு நன்கு சுருள வதங்கியதும பிறகு நறுக்கி வைத்துள்ள காய்களை போட்டு அதை தொடர்ந்து உப்பு,குழம்பு தூள்,மஞ்சத்தூளப் போட்டு நன்கு கிளறவும் அதில் ஊறவைத்த பாசிப்பருப்பை போட்டு , தேங்காப்பூவை போட்டு கிளறி, 1 1/2கப் தண்ணிர் ஊற்றி 1 விசில் போட்டு இறக்கிவிடவும்

இது சப்பாத்தி சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்